Thursday, August 3, 2017

சுடலை மாடன் வரலாறு மற்றும் அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:

சுடலை மாடன் வரலாறு மற்றும் அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சுடலை மாடசாமி கோவில்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தக் கோவில்கள் பெரும்பான்மையாகத் திறந்தவெளியில், காவிக் கோடுகள் போடப்பட்ட திண்ணையின் மேல் முக்கோண வடிவிலான பீடங்களாகவே அமைக்கப்பட்டிருக்கும். சில கோவில்களில் இந்தப் பீடங்களின் முன்பகுதியில் சுடலை மாடசாமியின் உருவப்படம் வரையப்பட்டிருக்கும். ஒரு சில பெரிய கோவில்களில் மட்டுமே சுடலை மாடசாமியின் உருவத்திலான சிலைகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும்.
சுடலை மாடசாமி பெரிய மீசையுடன் வலது கையில் அரிவாள், இடது கையில் கம்பு போன்றவைகளுடன் மாட்டினை வாகனமாகக் கொண்டு காட்சியளிக் கிறார். சுடலை மாடசாமி சிலருக்கு குலதெய்வமாகவும், சில கிராமங்களில் காவல் தெய்வமாகவும் இருப்பவர். சுடலை மாடசாமி வீற்றிருக்கும் திருக்கோவில் திருவிழாக்களின்போது, நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளில் சுடலை மாடசாமியின் தோற்றம் குறித்த கதை சொல்லப்படுகிறது.
ஈசனிடம் சோதனை
ஒருமுறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், பூலோகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் வினைப்பயன்படி உணவு அளிக்கும் நோக்கத்துடன் கிளம்பினார். சிவபெருமான் இந்தப் பணியை முழுமையாகச் செய்து வருகிறாரா? என்று பார்வதிக்கு சிறு சந்தேகம் எழுந்தது. அவள் ஒரு சிற்றெறும்பைப் பிடித்துக் காற்று கூட புக முடியாத குமிழ் ஒன்றில் அடைத்து வைத்தாள்.
தன் பணியை முடித்துத் திரும்பிய சிவபெருமானிடம் பார்வதி, சுவாமி!, இன்று அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டீர்களா? என்று கேட்டாள். சிவபெருமான், ஆமாம், நான் அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டேன். உனக்கு இதிலென்ன சந்தேகம்? என்றார்.
பார்வதிக்கு சாபம்
இந்தக் குமிழில் அடைபட்டிருக்கும் சிற்றெறும்புக்கும் உணவளித்து விட்டீர்களா? என்றபடி குமிழின் மூடியைத் திறந்தாள். அந்தச் சிற்றெறும்பின் வாயில் ஒரு அரிசி இருந்தது. பார்வதிக்குத் தன் தவறு புரிந்தது. இதைக் கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். என்னுடைய மனைவியான நீ, என் பணியில் சந்தேகமடைந்து என்னைச் சோதிப்பதா?. என்னைச் சோதித்த நீ காட்டுப்பேச்சியாக மாறி, காடுகளில் அலைந்து கொண்டிரு! என்று சாபமிட்டார்.
பார்வதி தன் செயலுக்காக மன்னிப்பு கோரி, சாப விமோசனமும் வேண்டினார். சிவபெருமான், வனப்பேச்சியாகக் காட்டில் அலையும் நீ, மயானத்தில் என்னை வேண்டித் தவமிரு... உரிய காலம் வரும்போது, நானே உன்னை வந்து மீட்பேன் என்று சாப விமோசனம் அளித்தார். பார்வதி காட்டுப்பேச்சியம்மனாக மாறி, காடுகளில் அலைந்து திரிந்து, கடைசியில் மயானத்தில் சிவபெருமானை வேண்டித் தவமிருந்தார். தவத்தின் முடிவில் தோன்றிய சிவபெருமான் அவளின் சாபத்தை நீக்கி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார்.
குழந்தை வரம்
பார்வதிதேவி, சுவாமி, எனக்கு இரு புதல்வர்களைக் கொடுத்தீர்கள். அவர்கள் தனித்துச் சென்று விட்டார்கள். எனக்குத் தாங்கள் இன்னுமொரு குழந்தையைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவ பெருமான், இந்த மயானத்தில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிணம் நன்றாக எரியும் போது, நீ என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்தி வேண்டிக் கொள். உனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும். அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர் என்று வரமளித்து மறைந்தார்.
பார்வதி, பிணம் நன்றாக எரியும் போது முந்தானையை ஏந்தியபடி சிவபெருமானை நினைத்து வேண்டி நின்றார். பிணம் நன்கு சுடர் விட்டு எரிந்த நிலையில், அதிலிருந்து சில சுடலை முத்துக்கள் பார்வதியின் முந்தானையில் வந்து விழுந்தன. அது குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை, உறுப்புகள் எதுவுமில்லாமல் பிண்டமாக இருந்தது. ஆனால், அதற்கு உயிர் இருந்தது.
இதைப் பார்த்த பார்வதி மீண்டும் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் அந்தப் பிண்டத்தை அழகிய குழந்தையாக மாற்றிக் கொடுத்தார். பார்வதியும் அந்தக் குழந்தையுடன் கயிலாயம் திரும்பினார்.
பூலோகம் செல்ல உத்தரவு
சுடலை முத்துக்களிலிருந்து தோன்றிய குழந்தை என்பதால், அதற்கு சுடலை மாடன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பார்வதி ஒரு நாள் இரவு அந்தக் குழந்தைக்கு உணவு கொடுத்து விட்டுப் படுக்கைக்குச் சென்று விட்டாள்.
நள்ளிரவு நேரம் சுடுகாட்டில் பிணம் ஒன்று எரியும் வாசனை அந்தக் குழந்தைக்கு எட்டியது. அந்தக் குழந்தை அங்கிருந்து சுடுகாட்டுக்கு வந்து, எரியும் பிணங்களை எடுத்துத் தின்றது. பேய்களோடு விளையாடி மகிழ்ந்தது. அதிகாலையில் கயிலாயம் திரும்பிப் படுத்துக் கொண்டது.
பார்வதிதேவி காலையில் குழந்தையைக் கையிலெடுத்த போது, அந்தக் குழந்தையிடமிருந்து பிண வாசனை வருவது கண்டு திகைத்தாள். நள்ளிரவில் நடந்ததை அறிந்து வருந்தினாள். இதுபற்றிச் சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான், பிணம் தின்ற இவன், இனி கயிலாயத்தில் இருக்க இயலாது. பூலோகம் சென்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்.
இதைக் கேட்ட சுடலை மாடன், நான் பூமியில் எப்படி வாழ்வது? தினமும் பிணங்களை எதிர்பார்த்து வாழ முடியுமா? எனக்கு நல்லறிவு வழங்கி நல்லதொரு வரமளிக்க வேண்டும் என்று வேண்டினார்.
சிவபெருமானும் உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்? என்று கேட்டார்.
சுடலை மாடன், பேய்கள் அனைத்தையும் நானே அடக்கி ஆள வேண்டும். நான் கொடுக்கும் மயானச் சாம்பலில் அனைத்து நோய்களும் தீர்ந்திட வேண்டும். தீயவர்களை அழிக்கத் துணை புரிய வேண்டும் என்று வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரங்களைத் தந்து அனுப்பினார்.
புதையல் காக்கும் பணி
சுடலை மாடன் பூலோகத்தில் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டபடியே, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரக்கரை எனும் ஊரை வந்தடைந்தார். இந்த ஊரிலிருந்த பகவதியம்மன் அவருடைய தாயைப் போல் தோன்றியதால், அவருடன் இருக்க விரும்பினார். பகவதியம்மனிடம் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். பகவதியம்மன் அவரை மகனாக ஏற்றுக் கொண்டதுடன், அவரிடமிருக்கும் புதையலைக் காக்கும் பணியையும் வழங்கினார்.
சுடலை மாடன், அம்மனின் அனுமதியைப் பெற்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் செல்வதும், பிற நாட்களில் பகவதி அம்மனின் புதையலுக்குக் காவலாகவும் இருந்தார்.
புதையலை மீட்டார்
இந்தநிலையில், கேரளாவின் நந்தம்புனலூர் எனும் ஊரில், பெரும் மந்திரவாதியான காளிப்பெரும்புலையன் என்பவன் இருந்தான். அவன் பகவதியம்மனிடம் இருக்கும் புதையலைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் திருடவும் திட்டமிட்டான். அவன் புதையலுக்குச் சுடலை மாடன் காவலாக இருப்பதையும், அவர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் சென்று விடுவதையும் அறிந்தான். ஒரு வெள்ளிக்கிழமை நாளில், சுடலை மாடன் மயான வேட்டைக்குச் சென்ற போது, பகவதியம்மனின் புதையலைத் காளிப்பெரும்புலையன் திருடிச் சென்று விட்டான். மயான வேட்டைக்குச் சென்று திரும்பிய சுடலை மாடன், பகவதியம்மனின் புதையல் திருடு போனதை அறிந்தார். உடனே கேரளாவில் இருக்கும் நந்தம்புனலூர் சென்று, காளிப்பெரும்புலையனின் மந்திர வித்தைகள் அனைத்தையும் தந்திரமாக முறியடித்து அவனைக் கொன்று புதையலை மீட்டு வந்தார்.
சுடலை மாடன் புதையலை மீட்டு வந்ததை அறிந்த கொட்டாரக்கரை மக்கள், அவரைத் தங்கள் காவல் தெய்வமாகக் கொண்டு வழிபடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, கொட்டாரக்கரையில் இருந்து வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய ஊர்களில், சுடலை மாடனுக்குத் தனிக் கோவில்கள் வைத்து வழிபடத் தொடங்கினர். இதனால், சுடலை மாடன் தென் மாவட்டங்களில் பல ஊர்களில், மாடசாமி, பெரிய மாடசாமி, புலமாடசாமி, வேம்படி மாடசாமி, கரையடி மாடசாமி, கொம்பு மாடசாமி, பட்டணத்து மாடசாமி, ஆற்றங்கரை மாடசாமி, சுடலை வீரன், சங்கிலி மாடசாமி, பொன் மாடசாமி, ஆகாச மாடசாமி, பூக்குழி மாடசாமி என்று பல்வேறு பெயர்களில் கோவில் கொண்டிருக்கிறார்.
உடைமைகளை மீட்பவர்
சுடலை மாடசாமி கொட்டாரக்கரை பகவதியம்மன் புதையலை மீட்டுக் கொடுத்தது போல், தங்களுக்குச் சொந்தமான உடைமைகள் எதுவாக இருந்தாலும், அதை ஏதாவதொரு வழியில் இழந்து விட்டால், அவைகளைச் சுடலை மாடசாமி மீட்டுக் கொடுத்துவிடுவார் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது. இதனால், சுடலை மாடசாமி கோவில்கள் அனைத்திலும், பக்தர்கள் இழந்து விட்ட தங்கள் பொருட்களை மீட்டுக் கொடுக்க வேண்டி வழிபடுவது வழக்கத்திலிருக்கிறது. இதுபோல், தீயசக்தியால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து, அவர்களிடமிருக்கும் தீயசக்திகளை விரட்டுவதற்கும் சுடலை மாடசாமி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வழிபாடு
சுடலை மாடசாமி கோவில்கள் அனைத்திலும் தினசரி வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கொடை விழாவில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தச் சிறப்பு வழிபாட்டின் போது சுடலை மாடசாமிக்குப் பொங்கல் வைத்து, ஆடு, கோழி, பன்றி போன்றவைகளைப் பலியிட்டு உணவு சமைத்து, மது, சுருட்டு போன்றவைகளையும் சேர்த்துப் படைத்து வழிபடும் நடைமுறை வழக்கத்திலிருக்கிறது.
அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:
சுடலை யந்திரம், வசிய மை,பிரம்பு இவைகளை வைத்து அவற்றின் முன்பு அசைவ படையல்,சுருட்டு,மது மாமிசம்,வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை லட்சம் உரு செபிக்க வேண்டும்.
மந்திரம்:
"ஹரி ஓம் அகோரமாடா கெம்பிரமாடா ஆகாசமாடா பகவதி புத்திரா வீராதி வீரா வாவா ஐயும் கிலியும் சௌவும் நசி மசி வாவா சுவாகா"
பலன்கள்:
வாக்கு சித்தி,அருள் வாக்கு கூறுதல்,சகல ஏவல் பில்லி சூன்யம் பேய்பிசாசுகளை நீக்கலாம்.எதிரிகள் சத்துருக்கள் தொல்லைகள் நீங்கும்.மேலும் சகல சித்துக்களும் ஆடலாம்.
சுடலை மாடன் யந்திரம்,வசிய மை,தீட்ஷை தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989