Tuesday, February 13, 2018

சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?


சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?
சிவராத்திரியான இன்று செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.

7. எருக்க மலர் மாலைகளைப் பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

8. சிவதண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பாலகும்.

தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர்.

அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.

வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவரக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.

அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.

சிவராத்திரி - நான்கு ஜாமம் விவரம்
சிவராத்திரி நான்கு ஜாம காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள்.
சிவராத்திரி முதல் ஜாம நேரம்:
இரவு 7.30 முதல் 9.30 மணி வரை

சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்:
இரவு 11.00 முதல் 12.30 மணி வரை

சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்:
அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை

சிவராத்திரி 4ஆம் ஜாம நேரம்:
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

சிவராத்திரி நான்கு ஜாமங்களாக உள்ளன. அக்காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள். சிவராத்திரி தினத்தில் அதிகாலை முதல் சிவசிந்தனையுடன் எல்லா காரியங்களும் செய்தால் நன்மை பயக்கும்.

அன்ன ஆகாரம் இன்றி பால் பழம் போன்றவைகள் ஒருவேளை மட்டும் உண்டு இறைவனின் பஞ்சாசரத்தை சதா சர்வகாலமும் ஓதியபடி இருந்தால் மன அமைதி பெற்று வாழ்வில் பலவித மாற்றங்கள் நமக்கு நன்மை தருவதாக அமையும். சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள். திருவண்ணா மலையில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று லட்சதீபம் ஏற்றுவார்கள். அதனை காண்பது சிறப்பாகும்.

சிவராத்திரி தினத்தில் சிவனை மனதார நினைத்து இரண்டாம் ஜாமத்தில் கிரிவலம் செய்தால் நினைக்கின்ற காரியம் வெகு விரைவில் முடியும். பிறவியில்லா பேரின்பத்தை தரும்.

லிங்கோத்பவ கால வழிபாடு

திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி.

அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

தேனாபிஷகம்

சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.

‘‘உங்களை வழிபடுவதில் எந்த வழிபாடு உங்களுக்கு மிகவும் பிடித்தது...?’’ என்று பார்வதி கேட்க, ‘‘சந்தேகமே வேண்டாம். மகா சிவராத்திரிதான் எனக்கு மகிழ்ச்சி தரும் நாள். விலையுயர்ந்த பட்டாடைகள், நகைகளை, மலர்களைவிட வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதுதான் சிறந்தது. இரவின் முதல் காலத்தில் பாலினாலும், இரண்டாம் பகுதியில் தயிரினாலும், மூன்றாம் பகுதியில் வெண்ணெய் அல்லது பசு நெய்யினாலும், கடைசியில் தேன் அபிஷேகம் செய்தும் என்னை குளிர்வித்து அருள் பெறலாம்’’ என சிவபெருமானே பூஜை செய்யும் முறைகளை விளக்கியிருக்கிறார்.